தன்னை வெட்ட வந்த கணவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி, அவரையே போட்டு தள்ளிய மனைவியால், திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இருக்கின்ற வட பருத்தியூரை சேர்ந்தவர் நாட்டுதுரை. இவர் விவசாயம் பார்த்து வந்தார். இவருடைய மனைவி கருப்பாத்தாள். இருவருக்கும் இடையே சில தினங்களாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தான், நள்ளிரவில் நாட்டுதுரை மனைவியிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்ட முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, அவருடைய மனைவி கருப்பாத்தாள் தற்காப்புக்காக கணவரிடம் இருந்த அரிவாளை பிடுங்க முயற்சி செய்தபோது, கணவர் மீண்டும், மீண்டும் அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கருப்பாத்தாள், கணவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி, அவரையே சரமாரியாக வெட்டியதில், கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் தான், அருகில் இருந்தவர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த நாட்டுதுரையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவரை கொலை செய்த மனைவி கருப்பாத்தாளை, கீரனூர் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.