கள்ளக்காதலியுடன் கணவர் விஷம் குடித்த நிலையில், இருவரையுமே மீட்டு மனைவி மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் தர்மராஜ், அந்த பகுதியில் கூலித்தொழில் செய்து வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி தமிழரசி மற்றும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், 20 வயதான இளம்பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டிற்கு முன்பு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வெல்லமண்டியில் தர்மராஜூம் அந்த இளம்பெண்ணும் ஒன்றாக வேலைப் பார்த்து வந்துள்ளனர். அப்போது, ஏற்பட்ட பழக்கம்தான் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களது விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததில் பூதாகரமாக வெடித்தது. அதைத் தொடர்ந்து தர்மராஜூம், இளம்பெண்ணும் பேசக்கூடாது என்று கூறி இருதரப்பினரும் அவர்களைப் பிரித்து வைத்தனர்.
இதைத் தொடர்ந்து மனைவி தமிழரசிக்கு தர்மராஜ் போன் செய்து ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை கூறினார். அதில், தான் தனது காதலியுடன் ஏற்காடு ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் இருப்பதாகவும், விஷம் குடித்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி, சம்பவ இடத்திற்கு உறவினர்களுடன் விரைந்து சென்றார். அப்போது மயங்கிய நிலையில், கிடந்த தர்மராஜையும், உடன் விஷமருந்தி மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரையும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தர்மராஜ், இளம்பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது குறித்து உறவினர்கள் கண்டித்ததும், கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரையும் பிரித்து வைத்ததையும் விசாரணையில் அறிந்தனர். இருப்பினும் 2 பேரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இருவரும் விஷம் குடித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.