தமிழக அரசு வழங்கும் முதியோர்களுக்கான உதவித்தொகை நிறுத்தப்படுவதாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலபாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் முதியோர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தற்பொழுது தமிழக அரசு நிறுத்த முயற்சித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பால பாரதி மதுரையில் மட்டும் 12,000 முதியோர்களின் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமர்ப்பிக்கப்பட்ட 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையிலேயே முதியோர் ஓய்வூதியத் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று பயனாளிகள் எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றம் தான் மிச்சம். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்த பயனாளிகளில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் முதியோருக்கான ஓய்வூதியத்தை திமுக அரசு ரத்து செய்துள்ளதாக வந்துள்ள செய்தி ஏழையெளிய வருவாய் இல்லாத முதியோரை கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
முதியோர் ஓய்வூதியம் என்பது அரசு அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொண்ட பிறகு, அவர்களுடைய வருமானம், வறுமை நிலை ஆகியவற்றின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. இவ்வாறிருக்க, முதியோர்களுக்கு இருக்கின்ற சொத்துகளின் அடிப்படையிலோ அல்லது அவருடைய பிள்ளைகளுடைய வருமானத்தின் அடிப்படையிலோ அல்லது அவர்கள் வீடுகளில் உள்ள பொருள்களின் அடிப்படையிலோ ஓர் ஆய்வை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளார்கள் என்று தெரிவித்து அவர்களுக்கு கொடுக்கப்படும் முதியோர் ஓய்வூதியத்தை அரசு நிறுத்தினால் அது ஏற்கத்தக்கதல்ல என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.