தமிழகத்தில் எதிர்வரும் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதை தொடர்ந்து, பொதுமக்களின் வசதிக்காக 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பாக தினந்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
அதன்படி வெள்ளிக்கிழமை முதல் வரும் ஞாயிறு வரையில் 3 நாட்களுக்கு தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு 650 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் இருந்து 850 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 6500 பேருந்துகள் இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதோடு மதுரை மற்றும் திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யப்படாத பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு கூடுதலான பேருந்துகளை இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதனை முன்னிட்டு, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவ,மாணவிகள் மறுபடியும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு திரும்பும் விதத்தில், அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.