கர்நாடக மாநில பகுதியில் உள்ள சித்தம்மனஹள்ளி கிராமத்தில் ஓம்கார கவுடா என்பவர் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் அவரது 15 வயது மகள் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மாணவியும் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்கிற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் அடிக்கடி உல்லாசமாக சுற்றி வந்து இருக்கிறார்கள்.
இளைஞர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இனி அவருடன் பழகக் கூடாது என்று மகளை கவுடா கடுமையாக கண்டித்து இருக்கிறார். ஆனால் சிறுமி அதை கேட்காமல் நாகராஜுடன் ஊர் சுற்றி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கவுடா மகளை ஆணவக் கொலை செய்து விட முடிவு செய்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து மகளை உணவு உண்ண ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பிடித்த உணவுகளை எல்லாம் வாங்கி தந்திருக்கிறார். மேலும், நகை கடைக்கு சென்று புது கம்மல் மற்றும் மோதிரம் போன்றவையும் வாங்கி குடுத்து, சினிமா பார்க்கவும் அழைத்துச் சென்றுள்ளார்.
அத்துடன் பசவேஸ்வரா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, இருவரும் இரவு வீடு திரும்பி இருக்கிறார்கள். வழியில் கிராமத்தில் கால்வாய் ஓரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு மகளை இழுத்துச் சென்று தண்ணீரில் வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார் கவுடா.
இதனையடுத்து மகளைக் கொன்று விட்டு கவுடா திருப்பதிக்கு தப்பி சென்றுள்ளார். தன் பெயரில் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். விசாரணையில், பல சந்தேகங்கள் இருந்த நிலையில் வேறு சாதி இளைஞரை காதலித்ததால் பெற்ற மகளையே ஆணவ கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து கவுடாவை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.