கொரோனாவை கட்டுப்படுத்த அரசு விதித்த விதிமுறைகளை மீறி, கர்நாடக பாஜக அமைச்சர் பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாஜக அமைச்சர் ஒருவர் சமூக விலகலை பின்பற்றாமலும், அரசின் விதிமுறைகளை மீறியும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ர்துர்கா மாவட்டத்தில் பரசுராமபுரா பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் அமைச்சர் பி. ஸ்ரீராம்லு கலந்துகொண்டார்.
அம்மாநிலத்தின் சுகாதார மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் ஸ்ரீராம்லுவிற்கு, மலர்களை தூவியும், கோஷங்களை எழுப்பியும், கைகளை தட்டியும் அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் அவருக்கு மிகப்பெரிய ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலையும் பின்பற்றாமல் ஒன்று கூடினர். அவர்களில் பலர் மாஸ்க் கூட அணிந்திருக்கவில்லை. கர்நாடகா அரசு மத மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான பிறகு, இதுகுறித்து பேசிய அமைச்சர், மக்கள் அனைவரும் எப்போதும், சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ நீங்கள் வீட்டில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும். நீங்கள் பிரதமர் மோடி கூறுவதையும், முதல்வர் எடியூரப்பா கூறுவதையும் கேட்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும், கைகளை முறையாக கழுவ வேண்டும்” என்று ஸ்ரீராம்லு தெரிவித்தார்.

இதனிடையே இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும், மஜத கட்சி தலைவருமான குமாரசாமி விமர்சித்துள்ளார். “ஒரு அமைச்சரே இப்படி செய்தால், பொதுமக்களின் நிலை என்ன..? இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மக்களுக்காக அவர்கள் பணியாற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். கர்நாடகாவில் இதுவரை 3,408 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.