தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதை தடுக்க காவல்துறை சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை மாநகரில் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று மொத்தமாக 60 கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸ் அக்கா என்ற புதிய திட்டத்தை கோவை மாநகர காவல் துறையினர் துவங்கியுள்ளனர்.
இதன்படி மாநகரில் இருக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டு அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வார். அந்தந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் அவர்களுடன் உளவியல் ரீதியான, பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து தீர்வு காணலாம்.
அத்துடன் கல்லூரிகளில் நடக்கும் மோதல்கள், ஈவ்டீசிங், போதை பொருட்கள் உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் புகார் அளிக்கலாம். அப்படி நியமிக்கப்படும் 37 பெண் காவலர்களை போலீஸ் அக்கா என்று அழைக்கலாம்.
மாணவிகளுக்கு இவர்கள் நல்லா சகோதரிகளாக செயல்படுவார்கள். இவர்களது தொடர்பு எண்களை எந்த நேரமும் மாணவிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து இடங்களிலும் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.