திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (39). இவர் கடந்த 3ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் விசாரணையில், கணவனை இழந்த உறவினர் பெண் மகேஸ்வரி (44) என்பவருடன் சுரேஷ் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து, சுரேஷ் உடனான தொடர்பை துண்டிக்குமாறு மகேஸ்வரியின் தம்பியான கருப்புச்சாமி (36) கண்டித்து வந்துள்ளார். இதனை சுரேஷும், மகேஸ்வரியும் கேட்காமல் தொடர்பு வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி சுரேஷ் தனது நண்பர் மணிமாறன் (25) என்பவருடன் மது அருந்த சென்றுள்ளார். மது அருந்திய பின் வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் சுரேஷை, பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் மதுவில் விஷம் கலந்து குடித்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷுடன் வாழ்ந்து வந்த மகேஸ்வரி, சுரேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், மகேஸ்வரியின் சகோதரர் கருப்புசாமி சுரேஷை கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலமானது. அதன்படி சுரேஷின் நண்பரான மணிமாறனை வைத்து கருப்புசாமி மது பாட்டிலில் விஷம் கலந்து சுரேஷுக்கு கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் மகேஸ்வரியின் சகோதரர் கருப்புசாமி மற்றும் நண்பர் மணிமாறன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.