கேரளாவில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதரஸா ஆசிரியருக்கு 169 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அலுவாவை சார்ந்தவர் யூசுப் வயது 72. இவர் கோட்டையம் மாவட்டத்தில் ஒரு மதரஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் 2019 ஆம் ஆண்டு அங்கு பாடம் படிக்க வந்த மாணவிகளிடம் இவர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இவர் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டது. இது குறித்து வந்த புகாரை அடுத்து தலையோலப்பறம்பு போலீசார் இந்த புகார் தொடர்பாக தீவிரமாக விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மதரசா ஆசிரியர் யூசுப் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அவர் பாலியல் ரீதியாக மாணவிகளை கொடுமை செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து அவர் மீது சட்டத்தின் கீழ் பதினோரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோட்டையம் மாவட்டம் கடுத்துருத்தி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நேற்று நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட யூசுப் பின் மீது காவல்துறை தரப்பிலிருந்து அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களுக்கும் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மீது பதியப்பட்ட 11 வழக்குகளில் ஐந்து வழக்குகளுக்கான தீர்ப்பை நேற்று அறிவித்தனர் நீதிபதிகள். இதன்படி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஐந்து வழக்குகளில் அவர் மீதான குற்றங்கள் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 169 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஆறு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த 169 ஆண்டு கால தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளனர். அவர் மீது சுமத்தப்பட்ட 11 வழக்குகளில் ஆறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட மாணவிகள் வழக்கு விசாரணைகளில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.