மதுரை பழங்காநத்தம் என்ற மருது பாண்டியர் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் மனைவி குணசுந்தரி. இத்தம்பதியருக்கு பாலாஜி (21) என்ற மகன் உள்ளார். இவர் அந்த பகுதியில் கறிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருப்பூர் தனியார் கல்லுாரி ஒன்றில் படிக்கும் பவித்ராவுக்கும், பாலாஜிக்கும் ஐந்து ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர்.
இது பவித்ராவின் குடும்பத்தினருக்கு பிடிக்காத காரணத்தினால் வீட்டை காலி செய்து விட்டு ஓராண்டுக்கு முன் திருப்பூர் சென்று விட்டனர். இதனையடுத்து பவித்ராவை மறக்க முடியாததால், கடந்த வாரம் மதுரை பசும்பொன்நகர் நீலகண்டன் கோவிலில் பவித்ராவை பாலாஜி திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, பவித்ரா – பாலாஜி தம்பதியினர் தல தீபாவளி கொண்டாடிக்கொண்டு இருந்த போது வீட்டின் முன்பாக பவித்ரா பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பவித்ராவின் சித்தப்பா கார்த்தி (40) என்பவர் திடீரென மது போதை கோவத்தில் பவித்ராவின் முகத்தில் பெட்ரோலை ஊற்றியுள்ளார்.
அச்சமயத்தில் பட்டாசில் இருந்து வெளியேறிய தீப்பொறியானது பவித்ராவின் முகத்தில் பற்றி தோளில் தீ காயம் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து தப்ப முயன்ற கார்த்தியை பாலாஜி, மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார். அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எஸ்எஸ்.காலனி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பவித்ரா காதலித்து திருமணம் செய்தது பவித்ராவின் சித்தப்பாவிற்கு பிடிக்காத நிலையில் மது போதையில் வீடு தேடி வந்து, பவித்ராவின் மீது பெட்ரோல் ஊற்றியுள்ளார் என தெரிய வந்துள்ளது.