ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திருவரங்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், மதுவிற்கு அடிமையான செல்வம், தினமும் குடித்து விட்டு லட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த லட்சுமி, இனி உன்னுடன் வாழ முடியாது என்று கூறி விட்டு தனியாக சென்று விட்டார். தனியாக வாழ்ந்து வந்த செல்வம், தன்னுடைய மனைவி லட்சுமியை சமாதானம் செய்து, தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு கேட்டுள்ளார்.
கணவனை நம்பாத லட்சுமி, தன்னால் வர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் லட்சுமியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய லட்சுமியை, செல்வம் இருசக்கர வாகனத்தால் இடித்து கீழே தள்ளியுள்ளார். பின்னர் மண்வெட்டியை எடுத்து கொடூரமாக அடித்து, கொலை செய்துள்ளார். மேலும், மனைவியை வெட்டிய மண்வெட்டியோடு முதுகுளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று, தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதன் பேரில், போலீசார் செல்வம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கொலை செய்த மண்வெட்டியோடு காவல் நிலையம் வந்த நபரால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.