தன் மனைவியின் புகைப்படத்தை நண்பருடன் சேர்ந்து முகநூலில் ஆபாசமாக பதிவிட்டு சித்தரித்து வந்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனைவி புகார் அளித்த சம்பவம் நாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கடைசல் ரோடு பகுதியைச் சார்ந்தவர் சபிதா பேகம். இவருக்கு நாகப்பட்டினம் அருகே உள்ள பெரராவச்சேரியை உமர் பாரூக் என்பவருடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்தின் போது வரதட்சணையாக 40 பவுன் நகை ரொக்கம் மற்றும் சீர்வரிசை செய்துள்ளனர் சபிதா பேகம் குடும்பத்தினர். இந்நிலையில் உமர் பாரூக்கின் வீட்டு மாடியை கட்ட வேண்டும் என்று கூறி 12 லட்ச ரூபாய் மறுபடியும் சபிதா பேகம் குடும்பத்தாரிடம் வரதட்சணையாக கேட்டுள்ளனர். இதற்கு அவர் தர மறுத்ததால் கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். சபிதா பேகம் தனது பெற்றோருடன் சென்று வசித்து வந்திருக்கிறார். அவரது கணவர் உமர் பாரூக் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் போலியான முகநூல் கணக்கு ஒன்றின் வழியாக சபிதா பேகத்தின் புகைப்படத்தை வைத்து சித்தரித்து அவதூறான செய்திகள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் வருவதாகவும் வந்த தகவல்களை அடுத்து அதிர்ச்சியடைந்த சபிதா பேகம் இது தொடர்பாக நாகப்பட்டினம் சைபர் கிரைமில் புகார் மனு அளித்தார்.
இந்த புகார் மனுவை விசாரித்த சைபர் கிரைம் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது சபிதா வேகத்தின் கணவர் உமர் பாரூக் என கண்டறிந்தனர். அவர் தனது நண்பரான ரியாஸ் என்பவருடன் இணைந்து இந்தப் படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவரது கணவர் வெளிநாட்டில் இருப்பதால் உடனடியாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து சபிதா பேகம் மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜவஹரிடம் உமர் பாரூக் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க புகார் மனுவை அளித்துள்ளனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட கண்காணிப்பாளர் விரைவிலேயே இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். சொந்தக் கணவனே தன் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தது நாகப்பட்டினம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.