தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மருத்துவப் படிப்புக்கான முதலாம் ஆண்டு பாடத்திட்டம் மொழிப்பெயர்ப்பு பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றது. அதன்படி, 6 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் பொறியியல் படிப்புகள் தமிழ் வழியில் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதே போல மருத்துவப்படிப்பும் தமிழ் வழியில் கொண்டுவரப்பட உள்ளது. புனேவில் இந்தி மொழி வழியில் எம்.பி.பி.எஸ். கல்வி உள்ளது. இதே போல சில மொழிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் தாய் மொழியில் கற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.