வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தனது பங்கு இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே அதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன. இதனால் அரசியல் களம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்றாலும், திமுக போன்ற கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி விட்டன.
தமிழக அரசியல் குறித்த பல்வேறு தகவல்கள் தினமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், முன்னாள் அமைச்சர் மு.க அழகிரி, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் மீண்டும் அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதனிடையே அழகிரி மீண்டும் திமுகவில் இணைய வேண்டும் என்ற போஸ்டர்களும் மதுரையில் ஒட்டப்பட்டன.

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தனது பங்கு இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பா.ஜ.,வில் இணைவதாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி. புதிய கட்சி தொடங்குவது குறித்து போகப் போகத் தான் தெரியும். எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பின் தான் எந்த முடிவையும் எடுப்பேன். வரும் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும்” என்று தெரிவித்தார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மு.க அழகிரியின் இந்த கருத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.