திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே செயல்பட்டு வரும் செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும் குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினரும் கல்குவாரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில், யாரோ கல்லைக் கட்டி அந்த இளைஞரை தூக்கி வீசியதாக தெரிகிறது. சம்பவம் நடந்து ஒருவாரத்திற்கும் மேலாகியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர் அணிந்திருந்த ஆடையில் ராம் பாய்ஸ் கபடி குழு காங்கயம் என்று எழுதப்பட்டிருந்தது.
குஜிலியம்பாறை வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் ஆய்வு செய்ததில் இங்கு செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமாக ஆலம்பாடி, மல்லபுரம், கோட்டநத்தம், சேர்வைக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த இளைஞரை கல்லை கட்டி கொலை செய்யப்பட்ட அதே கல்குவாரியில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு இளம்பெண் உள்பட மூன்று பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.