பால் முகவர்களை மிரட்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட, நாகை ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் கைது செய்யப்பட்டு சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு வணிக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பால் விற்பனையாளர்கள் காவலர்களின் வீடுகளுக்கு பால் கொடுக்க மாட்டோம் எடுக்க அறிவித்தனர்.
பின்னர் தங்களது அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதற்கிடையே, பால் முகவர்களின் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி நாகை டிஎஸ்பி வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரியும் காவலர் ரமணன் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

பால் விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும், வாகனத்தை மறிப்போம், மாஸ்க் இல்லை, வித் அவுட் ஹெல்மட், வித் அவுட் சீட் பெல்ட் போன்ற வழக்குகளைப் பதிவு செய்வோம் என்றும், சும்மா அலற போரிங்க என்றும் மிரட்டும் தொனியில் செய்துள்ள அவரது முகநூல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இந்த நிலையில், இது தொடர்பாக புகார்கள் குவிந்த நிலையில், நாகை டிஎஸ்பி வாகன ஓட்டுநராக இருந்த ஆயுதப்படை காவலர் ரமணனை சஸ்பெண்ட் செய்து நாகை எஸ்.பி செல்வ நாகரத்தினம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.