செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல் வயது 56. இவருக்கு 17 வயதில் கவிதா என்ற மகள் இருக்கிறார். அவர் கடப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். தினமும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஷேர் ஆட்டோவிற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார் மாணவி கவிதா. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் வைத்திருந்த பிளேடால் அந்த மாணவியின் கழுத்தை அறுத்துள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார் மாணவி. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடிக்க துரத்திச் சென்றனர்.
அந்த மர்ம நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த சூனாம்பேடு காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. மேலும் அப்போதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பட்டப் பகலில் பள்ளி மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.