தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று காலை 8.30 மணியளவில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறினால் அதற்கு புரெவி என்ற பெயர் வைக்கப்படும். இதன் காரணமாக, டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகம், புதுவையில் பரவலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும். நாளை முதல் தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும்.

வங்கக்கடலின் தென்கிழக்கு, மத்திய தெற்கு, அந்தமான் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு 60 கி..மீ.வேகத்தில் சூறைக்காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் ‘ என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே புதிதாக உருவாகும் புரெவி புயல் டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.