அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர்போர்ஸ் ஒன் எனும் விமானத்திற்கு இணையான வசதிகள் கொண்ட, இரண்டு புதிய போயிங் ரக விமானங்கள் பிரதமர் மோடியின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட உள்ளன.

உலகின் சக்தி வாய்ந்த பொறுப்பாக கருதப்படும் அமெரிக்க அதிபருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள, ஏர்போர்ஸ் ஒன் எனும் விமானத்தில் பாதுகாப்பு மற்றும் அலுவல் பணிகள் என சகல வசதிகளும் இடம்பெற்றுள்ளன. சுருக்கமாக இந்த விமானத்தை வானில் பறக்கும் வெள்ளை மாளிகை எனக் குறிப்பிடுவதும் உண்டு. இதே அளவிற்கு அனைத்து வசதிகளையும் கொண்ட இரண்டு விமானங்களையே இந்தியாவும் வாங்கி உள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக இந்திய பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார். இதனால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பயன்படுத்தும் கார் மற்றும் விமானங்களில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய நிலையில் ஏர் இந்தியாவின் பி747 (B747) விமானங்களில் தான் பிரதமர் மோடி பறந்து வருகிறார். மேலும், இந்திய குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் பதவிகளை வகிப்பவர்களும் இதே விமானங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பி747 விமானங்களை ஏர் இந்தியாவின் பைலட்கள் தான் இயக்கி வருகின்றனர்.

ஏஐஇஎஸ்எல் எனப்படும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் (AIESL – Air India Engineering Services Limited) அவற்றை பராமரித்து வருகிறது. இந்த சூழலில் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக VVIP BOEING 777- 300ER 2 புதிய விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது.

இந்த ஒவ்வொரு விமானத்தின் தலா விலையும் 1,200 கோடி என கூறப்படுகிறது. முழுவதும் வெள்ளை நிறம் கொண்ட இந்த விமானத்தில் பக்கவாட்டில் இந்தியா தேசிய கொடி மாதிரியும் நாட்டின் பெயரும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதே போல், விமானத்தின் வால் பகுதியிலும் தேசிய கொடி இடம்பெற்றுள்ளது.
இந்த விமானங்களில், Large Aircraft Infrared Countermeasures (LAIRCM) எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் (Missile Defence Systems) இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் போயிங் 747-200பி (Boeing 747-200B) விமானத்திற்கு இணையான பாதுகாப்பை இந்திய பிரதமர் மோடியின் போயிங் 777 விமானமும் பெறும். மேலும் இந்தியா வாங்கவுள்ள இரண்டு புதிய போயிங் 777 விமானங்களில் எஸ்பிஎஸ் எனப்படும் சுய பாதுகாப்பு அறைகளும் (SPS – Self-Protection Suites) இடம்பெற்றிருக்கும்.

இந்த 2 பாதுகாப்பு அமைப்புகளையும் இந்தியாவிற்கு விற்பனை செய்ய கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் 1,400 கோடி ரூபாய் ஆகும். மேலும், இந்த விமானங்களை இந்திய ஏர் போர்ஸ் (IAF) அமைப்பை சேர்ந்த பைலட்கள் மட்டுமே இயக்க உள்ளனர். இதற்கான சிறப்பு பயிற்சிகளும் 40 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் இந்த விமானங்கள் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் கூறப்படுகிறது.