ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்விநிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ளும் போது, ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைகிறது எனவும், அந்த இணையதளங்களை மாணவர்கள் அணுக இயலாத வகையில், புதிய வழிமுறைகளை உருவாக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரம், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வரும் 15-ம் தேதிக்குள், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கை ஜூலை 20-ம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கவும் முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.