வாகனங்களில் பெட்ரோல் நிரப்புவதற்கு அவரவர் படாதப்பாடு பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மீனவர் ஒருவர் தன்னுடைய படகுக்கு பெட்ரோல் நிரப்ப சென்றபோது சுமார் 231 லிட்டர் பெட்ரோலை வீண் செய்திருக்கும் சம்பவம் ஆஸ்திரேலியாவில் அரங்கேறியிருக்கிறது.
இதுதொடர்பான வீடியோ ஒன்று ஃபிஷிங் சிட்னி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த அந்த மீனவர் தனது படகுக்கு பெட்ரோல் போடுவதற்காக பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அங்கு படகின் பெட்ரோல் டேங்கில் பெட்ரோலை நிரப்புவதற்கு பதிலாக படகில் இருக்கும் ஒரு Rod Holder-இல் நிரப்பியிருக்கிறார். இதனால் பெட்ரோல் முழுவதும் டேங்கிற்கு பதில் படகு முழுவதும் குளம் போல தேங்கியிருக்கிறது.
சுமார் 231 லிட்டர் பெட்ரோல் போடப்பட்ட பிறகே பெட்ரோல் அனைத்தும் வீணானது மீனவருக்கு தெரிந்திருக்கிறது. அந்த பெட்ரோலுக்கான மொத்த விலை 536.76 ஆஸ்திரேலியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 30 ஆயிரத்து 700 ரூபாயாம். இந்த நிகழ்வை பெட்ரோல் பங்க்கில் இருந்தவர் வீடியோ எடுக்க அப்போது, “இப்படி ஒரு தவறை ஒரு போதும் யாரும் செய்துவிடாதீர்கள்” என அந்த படகுக்கு சொந்தக்காரரான மீனவர் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “முட்டாள்தனமான செயல் இது. ஆனால் மற்றவர்களெல்லாம் இதற்கு நியாயம் கற்பிக்கிறார்கள்” என்றும், “படகு வைத்திருப்பவர்களுக்கு இது போன்று நடப்பது வாடிக்கையான ஒன்றுதான்” என்றும் பதிவிட்டுள்ளனர்.
வீடியோவை காண: https://fb.watch/iABY-u8SkE/