கேரளாவில் மைதாவால் செய்யப்பட்ட பரோட்டாவை, ஆசையாக சாப்பிட்ட பிளஸ்1 மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிஜு கேப்ரியல் என்பவரின் மகள் நயன்மரியா (16). இவர் அங்குள்ள செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு பரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனால், அவரது உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் இடுக்கி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி நயன்மரியாவுக்கு மைதா மற்றும் கோதுமையில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிடும் போதெல்லாம் அலர்ஜி ஏற்பட்டதாக அவரது நெருங்கிய நண்பர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், கொஞ்சக் காலமாக இதில் அவரது உடல்நிலை முன்னேறியுள்ளது. மைதா மற்றும் கோதுமை பொருட்களைச் சாப்பிடும்போது அவரது உடலில் ஏற்படும் அலர்ஜி சற்று குறைந்துள்ளது. இதனால் நயன்மரியா கடந்த சில காலமாக அதிகப்படியான மைதாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டுள்ளார்.
இதுவே அவருக்கு இப்போது எமனாக மாறிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு பரோடாட்டா சாப்பிட்டுள்ளார். இருப்பினும், மறுநாளே இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது உடலில் சில மோசமான அறிகுறிகளும் தெரிய தொடங்கியுள்ளது. மைதா சாப்பிடுவது நமது கெட்ட கொழுப்பை (LDL) அதிகரிக்கிறது. நமது உடலில் இருக்கும் தமனிகளை அடைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை அலவையும் சீர்குலைக்கிறது. இது எப்போதும் நம்மைப் பசியுடன் வைத்திருக்கிறது. மைதாவால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து முழுமையாக அறியாததாலேயே இதை மக்கள் அதிகப்படியாகச் சாப்பிடுகிறார்கள். மைதாவால் செய்யப்பட்ட பானி பூரி, சீஸ் கேக், பாஸ்தா, நூடுல்ஸ் மற்றும் பீட்சா போன்றவற்றைச் சாப்பிடுவதால் நமது உடல் எடையும் கடுமையாக அதிகரிக்கிறது.
மருத்துவர்கள் அனைவருமே மைதாவில் இருந்து செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்றே சொல்லி வருகிறார்கள்.. மைதா மோசமானது என்று சொல்வது எளிது.. ஆனால் மைதாவில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. மேலும் மைதாவில் இருந்து செய்யப்படும் உணவுகள் சுவையாக இருப்பதால், அதை முற்றிலுமாக சாப்பிடாமல் இருப்பது கடினமாகவே இருக்கிறது. எனவே, முற்றிலும் மைதாவை கைவிட முடியவில்லை என்றாலும் முடிந்தவரைக் குறைக்கப் பாருங்கள்.. உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் அதிகம் எடுத்துக் கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.