ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகின்ற 27 ஆம் தேதியின் நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரம் கலை கட்டி உள்ளது. அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரமுகர்கள் என அனைவரும் ஈரோடு கிழக்கு பகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னால் எம் எல் ஏ கே எஸ் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியின் சார்பாக காங்கிரசின் மூத்த தலைவரான இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் நாள் நெருங்கி வருவதை முன்னிட்டு தங்களது ஆதரவு வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தேர்தல் பணிகளை பார்வையிடுவதோடு தீவிரமான வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நாட்களாகவே அப்பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அரசு தரப்பில் இருந்து அதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
ஆளும் திராவிட முன்னேற்றக் கழக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கவுன்சிலர்களிடம் பொதுமக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்ற வேண்டி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் ஆளும் வர்க்கத்தின் மீது அப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கே.என்.கே சாலையில் அமைந்துள்ள குடியிருப்புகளில் வாக்காளர் பட்டியலை சரி பார்க்க சென்ற திமுக உறுப்பினர்களை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் பொதுமக்கள் சரமாறியான கேள்விகளை முன் வைத்தனர். தங்களின் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரிய கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கேள்வி கேட்ட மக்கள் தங்களின் கவுன்சிலர்களிடம் கொடுக்கப்படும் கோரிக்கைகள் எல்லாமே நிறைவேற்றப்படாததாகவே இருப்பதாக கடும் குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது .
உங்களை தேர்ந்தெடுத்து எங்களுக்கு எந்த உபயோகமும் இல்லை . நாங்கள் வாக்களித்து ஒரு வருடம் ஆகிவிட்டது இதுவரை கொடுத்த எந்த கோரிக்கைகளையும் உங்களது வேட்பாளர்களும் கவுன்சிலர்களும் இதுவரை எங்களுக்கு நிறைவேற்றி தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் . அதனால் திராவிட முன்னேற்றக் கழகம் இனிய எங்களிடம் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என பொதுமக்கள் முற்றுகையிட்டு திமுக நிர்வாகிகளிடம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சில நாட்களுக்கு முன் விலகிய திரைப்பட நடிகை காயத்ரி ஜெயராமும் அந்த வீடியோக்களை பகிர்ந்து இதுதான் நமக்கு கேள்வி கேட்க கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் என ட்விட்டரில் பதிந்திருக்கிறார்.