கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவது வழக்கம். அவ்வப்போது ஏற்படும் கடல் அரிப்பால்
கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவது வாடிக்கையான நிகழ்வு என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் மற்றும் அரபிக்கடல் பகுதியில் சூரைக்காற்று வீசுவதால், கடல் சீற்றத்துடனே காணப்படுகிறது. இந்நிலையில், அழிக்கால் குளச்சல் மீனவ கிராமங்களில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும்பியது.
கடல் நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததோடு சில வீடுகளையும் சூழ்ந்து கொண்டது. தொடர்ந்து கடல் சீற்றம் அதிகரிக்கும் நிலையில் குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.