தமிழக ரேஷன் கடைகளில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் கொரோனா காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவையை கருதி மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவச தானியங்களை வழங்கியது. அதாவது ’பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச உணவு தானியங்களை பெற்று பயனடைந்தனர். இந்நிலையில், மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை குறைத்துள்ளது.
மேலும் தமிழ்நாடு, கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து அதிக அளவில் அரிசி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டதை தொடர்ந்து கோதுமை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க மொத்தம் 3 கோடி கிலோ கோதுமை தேவை. ஆனால், இம்மாதம் 85 லட்சம் கிலோ மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நவம்பர் மாதம் அதிகபட்சமாக ஒரு ரேஷன் அட்டைக்கு 3 கிலோ கோதுமை மட்டுமே கிடைக்கும் நிலை உருவாக்கியுள்ளது. இதனால், தமிழகத்திற்கு கூடுதல் கோதுமை ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.