அரசின் பக்கம் தவறு என்று தானே, அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்..? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் மு.க ஸ்டாட்லின் தொடர் ட்வீட்கள் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்றும் தமிழக முதலமைச்சர் எதனடிப்படையில் சொன்னார்?
தவறு அரசின் பக்கம் என்றுதானே அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்? இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா? காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்திடுக!
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும” என்று குறிப்பிட்டுளார்.
முன்னதாக சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இறப்பு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.