கேரளாவில் கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சென்ற வாரம் கர்ப்பிணி யானை ஒன்று பசியால் சுற்றித்திரிந்துள்ளது. அதற்கு உணவளித்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் அன்னாசி பழத்தினுள் வெடியை வைத்து யானைக்குக் கொடுத்துள்ளனர்.
இந்த வெடி யானையின் வாயில் வெடித்ததால், யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த யானை, அங்குள்ள வெள்ளியாறு நீருக்குள்ளேயே நின்றுள்ளது. எனினும் இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் சென்று யானையை மீட்பதற்குள் அது உயிரிழந்துவிட்டது. மேலும் உடல்கூறு ஆய்வின் போதுதான் அது கர்ப்பிணி யானை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் “ கேராளாவில் மலப்புரத்தில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
பசியுடன் வந்த யானைக்கு உணவில் வெடிகுண்டை வைத்து கொடுத்தது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. யானையை கொன்றது யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.