அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேருக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் மூச்சு முட்டுவதால், மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் காற்று மாசு அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த தீபாவளிக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகை , வாகனங்கள் வெளியிடும் புகை காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதனால், டெல்லி மக்கள் மூச்சுவிடுவதற்கு கூட சிரமப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை ஆக்சிஜனை தேடி மக்கள் அலையும் சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.
டெல்லியின் அண்டை மாநிலமான பஞ்சாப் உட்பட சில மாநிலங்களில் விவசாய கழிவுகளை தொடர்ந்து எரித்து வருவதாலும், டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் டெல்லியில் 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்த படியே பணிபுரியவும் (Work From Home)உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் டீசல் லாரிகளுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கியாஸ் மூலமும் மின்சார மூலமும் இயக்கப்படும் வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.