தமிழக மக்கள் கொரானாவை பற்றி அச்சம் கொள்ள வேண்டாம், ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரானா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு, வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், மீண்டும் ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரானா குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகரிகிறது. தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் உள்ளது. வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரானா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது. நோய்த்தொற்று பற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்; ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நாள் முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை மாநில பேரிடர் மேலாண்மை சார்பில் 14 கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் ஒரு முறை நடத்தப்பட்டது. அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும். கொரானா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருந்து கொள்முதல், உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றை அரசு தொடர்ந்து செய்து வருகிறது என முதலமைச்சர் தெரிவித்தார்.