தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் சராசரியாக 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.
குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று பதிவான கொரோனா பாதிப்பு குறித்து சுகாதார துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் இன்று வீடியோ மூலம் விளக்கமளித்தார். அதில் பேசிய அவர் “ தமிழகத்தில் இன்று மட்டும் சுமார் 17,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504- ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 1257 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,244-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 44 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 479-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 797 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25,344-ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.