தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா திவிரமடைந்து வருவதால், உலகளவிலான பாதிப்பில் இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதேபோல் தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கடந்த சில நாட்களாகவே, சராசரியாக 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று பதிவான கொரோனா பாதிப்பு குறித்து சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று மட்டும் சுமார் 17,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661- ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 1,415 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,896-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 435-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,547பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட 19,676 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.