கொரோனா பாதிப்பு உச்சக்கட்ட நிலையில் இருக்கும் தமிழகத்தில் அதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்த, ஐ.ஏ.எஸ் அதிகாரியான பீலா ராஜேஷ் கோடிகளை கொட்டி பிரம்மாண்ட வீட்டைக் கட்டி கிரகப் பிரவேசம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலையில் கேளம்பாக்கத்துக்கும் திருப்போரூருக்கும் இடையே அமைந்துள்ள ஊர் தையூர் எனும் பட்டியலின மக்கள் அதிகம் வாழும் கிராமம். அங்குள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்திற்கு பின்புறம் அமைந்துள்ளது கோமான் . அந்தப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 56 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் சகல வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் இடம்பெற்றுள்ளன
அதில் மிகப் பிரம்மாண்டமாக மூன்றரை ஏக்கர் பரப்பளவில் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பண்ணை வீட்டைப் போல பிரிட்டீஷ் அரண்மனை கட்டிடக் கலையுடன் அமைந்த வீட்டில் சமீபத்தில்தான் கிரகப் பிரவேசம் நடந்துள்ளது. இந்த பிரம்மாண்ட வீடு தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட பீலா ராஜேஷுக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கூறும் அப்பகுதியை சேர்ந்த கிராமவாசிகள், இதுபோல ஒரு வீட்டை யாராலும் கட்ட முடியாது. இந்தக் கிராமத்துச் சாலைகளில் மிகப்பெரிய லாரிகளைக் கொண்டு வந்து, ஒன்பது ஆண்டுகளாக இந்த வீடு கட்டப்பட்டது. இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த வீட்டில் தனியாக ஒரு பெரிய நீச்சல்குளம், உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம், செயற்கையாக உருவாக்கப்பட்ட குளம், அதில் மீன்கள்- பறவைகள். அந்தக் குளத்தின் நடுவில் அமர்வதற்கு இருக்கைகள், இவற்றோடு கூடுதலாக இன்னொரு வீடு, இதுதவிர பாதுகாவலர்கள் தங்குவதற்குத் தனி அறை, மழை நீர் தேங்கும் தையூர் ஏரிக்கரையில் வீட்டிற்குள் நீர் புகாதபடி கூழாங்கற்களைப் பரப்பி இரண்டரை ஏக்கர் நீளத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை என சகல வசதிகளும் இருக்கிறது என ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர். பீலா ராஜேஷ், ஜார்க்கண்ட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தபோது அங்கிருந்து கட்டிடப் பணியாளர்கள் கொண்டுவரப்பட்டு வேலை ஆரம் பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் மூன்றரை லட்ச ரூபாய்க்கு விலை போவதாக கூரப்படும் நிலையில், பீலா ராஜேஷ் மற்றும் அவரது கணவரான தமிழ்நாடு மதுவிலக்குத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கும் ராஜேஷ்தாஸ் தம்பதியினர் அங்கு 350 சென்ட் நிலம் வைத்திருக்கிறார்கள். அதில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்றரை லட்சம் சதுர அந்த அடியில் பண்ணை வீடு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரும்பாலும் தலித்துகளுக்கே சொந்தமாக இருந்த அப்பகுதியில் உள்ள நிலத்தை ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் சென்ட்டுக்கு 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து 1990-களில் வாங்கியதாகவும், அதன் பிறகு அந்த நிலம் ரியல் எஸ்டேட்டுக்காக சாலைகள் விரித்து மனைகளாக மாற்றப்பட்ட நிலையில் அங்கு முதலில் இடம் வாங்கியவர் ராஜேஷ்தாஸ் – பீலா தம்பதியினர் எனக் கூறப்படுகிறது.