பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது பிறந்த நாளை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ’’ நாட்டில் ஒரே மதம் , ஒரே மொழி என்று கொண்டு வருவதற்கான திட்டங்கள் நடைபெறுகின்றன. இதை நாம் அனுமதிக்க முடியாது. இது பல மொழிகள் பேசக்கூடிய, பல தேசிய இனங்கள் வாழக்கூடிய ஒன்றியம். இதை புரிந்து கொள்ளலாமல் ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்ப இப்படி பேசி வருவது பேராபத்தை கொண்டு வந்துவிடும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் சென்று மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார். ஆளுநரை வைத்துக்கொண்டு இரட்டை ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டுகிறார். ஆனால் இங்கே உளவுத்துறை, காவல்துறை என பலவற்றை வைத்துக்கொண்டு இந்த வழக்கை என்.ஐ.ஏ-விடம் ஏன் தூக்கி கொடுத்தீர்கள். அது மாநில உரிமையை எடுத்துக் கொடுப்பதாக இல்லையா?
ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், நீதிபதிகள் இவர்களை ஆளுநராக நியமிப்பதை நிறுத்த வேண்டும். மக்களிலிருந்து மக்களுக்காக சேவை செய்து வந்த தலைவர்களைத்தான் நியமிக்க வேண்டும். அதிகாரிகள் இந்த பதவியை எதிர்பார்த்து இருந்தால் அதிகாரத்தில் இருக்கும்போது என்னவாக இயங்கி இருப்பார்கள். பலர் காவல்துறை பா.ஜ.க மயமாகிவிட்டது என்கிறார்கள்,
`நிலம், வளம், மக்கள் மற்றும் மண்ணாசை, பொன்னாசை என அனைத்தையும் துறந்தவர்தான் ரிஷி, அவர் நாட்டை உருவாக்கினார் என கூறுவது பைத்தியக்காரத்தனம். ஒன்றுமே தெரியாதவரை எப்படி ஆளுநர் ஆக்கினார்கள் என தெரியவில்லை.மற்றொரு பக்கம் காவல்துறை தி.மு.க மயமாகிவிட்டது என்கிறார்கள். இதில் நாம் எதனை ஏற்றுக்கொள்வது’’ என்றார்.