ஆசிரியர் தகுதித் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு ஜனாதிபதியின் பெயர் கூட தெரியவில்லை என்ற சம்பவம், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வின் தரத்தை வெளிப்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 69 ஆயிரம் ஆசிரியர் பணிக்கு அண்மையில் தேர்வுகள் நடைபெற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால், இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாகவும், பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பணம் கைமாறியதாகவும் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதை தொடர்ந்து ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநியமனத்தை ஐகோர்ட் ரத்து செய்தது. இதை எதிர்த்து மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையீட்டுள்ளது. உதவி ஆசிரியர்களின் 37,339 பதவிகளை காலியாக வைக்குமாறு சுப்ரீம் கோர்ட் செவ்வாய்க்கிழமை அரசுக்கு உத்தரவிட்டது, இதன் மூலம் மாநிலத்தில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், யோகி ஆதித்யநாத் அரசு மாநிலத்தில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளோம். அவர்களில் தேர்வில் 95 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்த தர்மேந்திர படேலிடம் விசாரணை நடத்தும் போது அவரிடம் பொது அறிவு குறித்த அடிப்படை கேள்விகளுக்கே பதில் இல்லை. இந்தியாவின் ஜனாதிபதி யார் என்று கேட்டால் கூட தெரியவில்லை“என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

விசாரணை அதிகாரி எஸ்.எஸ்.பி சத்தியார்த்த அனிருத் பங்கஜ் கூறுகையில், முக்கிய குற்றம் சாட்டப்பட்ட கே.எல். படேல் மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரும் ஆவார் அவரிடம் இருந்து ரூ .22 லட்சத்துக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டுள்ளது. ராகுல் என்ற விண்ணப்பதாரர்களில் ஒருவர் ஆட்சேர்ப்புக்காக லஞ்சம் வாங்கப்படுவதாக போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. பிரயாகராஜ் போலீசார் உடனடியாக புகார் அளித்து கே.எல். படேல் மற்றும் 9 பேரை கைது செய்து உள்ளதாக கூறினார்