”ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளதாலும், அவர்கள் இணைந்து செயல்பட விரும்புவதாலும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறேன் என தனியரசு தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ தனியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், ”தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஓயாது உழைக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் இந்த பொதுக்குழு நன்றி பாராட்டுகிறது. மத்திய பாஜக மோடி அரசு பொறுப்பேற்றது முதல் வரலாறு காணாத அளவு பெட்ரோல்-டீசல், சிலிண்டர், இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்களைக் காக்க மத்திய அரசு விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 27 தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன”.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, “அதிமுகவில் ஓபிஎஸ் பாதிக்கப்பட்டு இருக்கிறார். விதிப்படி, சட்டப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான். ஏற்கனவே அதிமுகவில் மூன்றரை கோடி தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட இரட்டை தலைமையை மறந்து, பொதுக்குழுவைக் கூட்டி ஓபிஎஸ்-ஐ வஞ்சித்து ஒற்றை தலைமை கோட்பாட்டைக் கொண்டு வந்தார் எடப்பாடி. தற்போது ஒற்றை தலைமை குறித்து நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். தற்போது தலைமை பொறுப்புக்காக அதிமுக ஊசலாடுகிறது. ஓபிஎஸ்-ஐ போலவே சசிகலாவும், தினகரனும் பாதிக்கப்பட்டுள்ளனர். என்பதற்காகவே அவர்களுக்கும் ஆதரவளிக்கிறேன்.
மீண்டும் 4 பேரும் இணைந்து செயல்பட்டால் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்தது போல, அதிமுக மிகவும் வலுவான கட்சியாக இருக்கும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயக மாண்பை மறந்து சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு, அதிமுகவை அளிக்க நினைக்கிறார். அதனால், அவருக்கு எனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறேன்”. இவ்வாறு அவர் பேசினார்.