தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சாதி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக, தனது மகளை கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிட்ட ஜி.பி.முத்து காவல்துறையினரிடம் சிக்கினார். காவல் நிலையத்தில் ஞானோதயம் பெற்று மன்னிப்பு கடிதமும் எழுதியுள்ளார்.

டிக்டாக்கை பயன்படுத்துபவர்களில் ஜி.பி. முத்துவை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ‘டிக்டாக் நண்பர்களே..’ என சாமானிய சொல்லாடலில் வீடியோ பதிவிடும் ஜிபி முத்து டிக்டாக் செயலியில் வெகுபிரபலம்.
ஜிபி முத்துவும், ரவுடி பேபி சூர்யாவும் டிக்டாக்கில் டூயட் வீடியோ வெளியிட்டால் ரசிகர்களுக்கு அன்றைய விவாதப் பொருளே அதுதான். நையாண்டியாக வீடியோ வெளியிடும்போது டிக்டாக் பிரபலங்களுக்குள்ளே தகராறுகள் நடப்பது வழக்கம்.
அதற்காக கமென்ட்களில் திட்டுவதும், அவரது ஐடிக்கு எதிராக டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு புகார் அளிப்பதும் நடக்கிறது. அப்படி ஜி.பி. முத்துவுக்கு எதிராகவும் டிக்டாக்கில் உள்ள பலர் புகார்கள் அளித்து ஐ.டி.யையே பிளாக் செய்யும் சம்பவங்களும் நடந்துள்ளன.

சீன நாட்டின் டிக்டாக் ஆப்புக்கு அடிமையானதால் குடும்பத்தினரால் வீட்டை விட்டு விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்ட மரக்கடை அதிபர் தான் ஜி.பி. முத்து.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்து, மரக்கடை வேலைக்கு செல்லாமல் டிக்டாக் மீட் என்று ஊர் ஊராக சுற்றி வந்ததாக கூறப்படும் நிலையில், அதனால் குடும்பத்தில் உருவான பிரச்சனையில் மனைவி குழந்தைகள், இவரை டிக்டாக் பைத்தியம் என்று விமர்சித்து வீட்டை விட்டு விரட்டுவதாக அவரே ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
அந்த வீடியோவின் இறுதியில் சிறுமியான தனது மகளை கட்டாயப்படுத்தி, வீடியோ எடுத்து அதில் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சாதி பெண்களின் முகபாவனையை இழிவுபடுத்தும் விதமாக பேசி இருந்தார்.

இதையடுத்து அந்த குறிப்பிட்ட சமுதாயம் சார்பில், மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த வினோ என்பவர் முதலமைச்சரின் தனிபிரிவுக்கு டிக்டாக்கர் ஜி.பி.முத்து மீது புகார் தெரிவித்து மனு அனுப்பி இருந்தார்.
இதனையடுத்து, புதன்கிழமை காலையில் குலசேகரப்பட்டினம் போலீசார் உடன்குடியில் மரக்கடையில் அமர்ந்து டிக்டாக் செய்து கொண்டிருந்த ஜி.பி.முத்துவை, பிடித்து அலேக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். ஜி.பி.முத்துவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் தான் குறிப்பிட்ட சாதி குறித்து உள் நோக்கம் ஏதுமின்றி யதார்த்தமாக பேசிவிட்டதாகவும், இனிமேல் குழந்தைகளை வைத்து மட்டுமல்ல, எந்த வீடியோவையும் டிக்டாக்கில் பதிவேற்றம் செய்ய மாட்டேன் என கதறியுள்ளார் ஜி.பி.முத்து.
காலையில் இருந்து இரவுவரை காவல் நிலையத்திலேயே வைத்து சிறப்பாக கவனிக்கப்பட்டதால் டிக்டாக்கின் தீமைகளை உணர்ந்து ஜி.பி.முத்து, மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததை தொடர்ந்து குடும்ப சூழ்நிலை கருதி அவரை, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.