திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனின் மறைவு வருத்தமளிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் இன்று காலமானார். கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவிலேயே கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ அன்பழகன் ஆவார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.