தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,11,151-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து, 3,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு தகுறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “ இன்று புதிதாக 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,151- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,251-ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 2,437 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மதுரையில் இன்று மட்டும் 308 பெருக்கும், செங்கல்பட்டில் இன்று மட்டும் 274 பேருக்கும். திருவள்ளூரில் இன்று 209 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது. இதேபோல் காஞ்சிபுரத்தில் 152 பேருக்கும், திருவண்ணாமலையில் 138 பேருக்கும், விருதுநகரில் 113 பேருக்கும், விழுப்புரத்தில் 109 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
இன்று ஒரே நாளில் 2,186 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62,778-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 60 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 46,860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.