தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் புதிதாக 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4 கட்டங்களை, கடந்து தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாட்டில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக சராசரியாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று மட்டும் 16,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31, 667- ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 1,155 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,149-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 269-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 604 பேர் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 16,999-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14,396 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.