தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் சராசரியாக 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தமிழக பாதிப்பு எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று பதிவான கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “தமிழகத்தில் இன்று மட்டும் 25,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,334- ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 1,373 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,929-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 625-ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 1,017 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28,641-ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை மொத்தம் 23,065 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.