தொடர்ந்து 5வது நாளாக புதிய உச்சத்தை எட்டியுள்ளதால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4 கட்டங்களை கடந்து தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாட்டில்லை. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் இந்தியாவில் சுமார் 2 லட்சத்து 16 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 4 நாட்களாகவே சராசரியாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,000-ஐ தாண்டியுள்ளது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 1072 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,670-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 220-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 585 பேர் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,901-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 12,000 பேர் மருத்துவமனையில் கொரொனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.