தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்த 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாகவே, 2,000-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,000-ஐ கடந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று பதிவான கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,377- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,493 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,172-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 53 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 757-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,438 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 32,754-ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 25,863 பேர் கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.