தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 67,000-ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே, 2,000-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,000-ஐ கடந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “ தமிழகத்தில் இன்று மட்டும் சுமார் 25,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று புதிதாக 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,469- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,654 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45,859-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 866-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,424 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 37,813-ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.