சென்னை பகுதியில் அண்ணா நகரில் மருத்துவர் ரெஜினா வசித்து வருகிறார். கனடா நாட்டில் வசிக்கும் தன்னுடைய மகளுக்கு சில பொருட்களை பார்சல் அனுப்புவதற்காக சர்வதேச கொரியர் நிறுவனங்கள் பற்றி இணையதளத்தில் தேடியிருக்கிறார்.
இந்த நிலையில் ப்ளூ டாட் கொரியர் சேவை என்ற பெயரில் ஒரு டோல் ஃப்ரீ எண் இருந்தது. குறிப்பிடப்பட்டுள்ள அந்த எண்ணை தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டார். அப்போது , அனுப்பக்கூடிய பொருட்கள், அவருடைய விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கின் யுபிஐ ஐடி போன்ற விவரங்களை கேட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இவை அனைத்தும் உண்மை என நம்பிய மருத்துவர் ரெஜினா, அவருடைய யூபிஐ ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை கொடுத்து, அதற்கு வந்த ஓடிபி-யையும் கொடுத்திருக்கிறார்.
இதனையடுத்து அந்த மோசடி கும்பல் அக்கவுண்டின் பாஸ்வேர்டு வைத்து ரெஜினாவுக்கு தெரியாமல் நாள் ஒன்றுக்கு ரூபாய் 1 லட்சம் என தொடர்ந்து எட்டு நாட்களாக சுமார் 8 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துள்ளனர்.
வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை அவர் அலட்சியமாக கவனிக்காமலே இருந்துள்ளார். அதன் பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த டோல் ஃப்ரீ எண் மற்றும் முகவரி போன்றவற்றை வைத்து ஜார்கண்ட் மாநிலம் பகுதியில் உள்ள ஜமந்தாராவுக்கு சைபர் கிரைம் போலீசார் சென்றனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட இக்பால் அன்சாரி, ஷம்ஷாத் அன்சாரி மற்றும் ஷக்பாஸ் அன்சாரி ஆகிய மூவரையும் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்து சிறையில் அடைத்துள்ளனர்.