விழுப்புரம் பகுதியில் திரு.வி.க. வீதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சசிகலா என்ற தலைமை ஆசிரியர் சிறப்பாக தனது பணியை செய்து வருகின்ற நிலையில், மாணவிகள் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என இவர் செய்த செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் இருந்த நிலையில் காலாண்டு தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று கிடைக்கும் என கூறி, மாணவிகள் அனைவரும் நன்முறையில் படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும் என கூறியிருந்தார்.
இதைதொடர்ந்து, காலாண்டு தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 581 மதிப்பெண்கள் பெற்றார் பிளஸ்-2 மாணவி எஸ்.லோகிதா. அதனால், அவருக்கு சிறப்பான பரிசளிக்கும் வகையில் மாணவி லோகிதாவை தனது இருக்கையில் அமர வைத்து மகிழ்ந்துள்ளார்.
மாணவி எஸ்.லோகிதா தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து லோகிதா சத்துணவு மையத்துக்கு சென்று அங்கு வழங்க இருந்த மதிய உணவையும் உண்டதுடன், ஒவ்வொரு வகுப்பறையாக சென்று கண்காணித்து வந்தார். அதனைத் தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தை பற்றி ஆசிரியர்களுடன் தனது கருத்தை பகிர்ந்து கலந்துரையாடினார்.
இச்சிறப்பு மிக்க வாய்ப்பை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பாக செய்து முடித்த மாணவி லோகிதாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மாணவி லோகிதா இந்த வாய்ப்பை பற்றி, “என் வாழ்நாளில் நினைத்து பார்க்காத வாய்ப்பு கிடைத்தது என்றும் இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நற்செயல் என்னைப் போன்ற மற்ற மாணவிகளும் வரும்காலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற முனைப்பாக அமையும்.” என தெரிவித்திருந்தார்.