விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டல புலியூர் பகுதியில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கே மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற 150 க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்கள்.
இந்த ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக எழுந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அந்த பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சரியான அனுமதி இல்லாமல் ஆசிரமம் நடத்தி இருந்தது தெரிய வந்தது.
ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நபர்களை அறைகளில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாக்கியது என்று பல்வேறு குற்ற செயல்கள் இந்த விசாரணையில் தெரியவந்தது. அத்துடன் ஆசிரமத்தில் இருந்து இதுவரையில் 16 பேர் காணாமல் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆசிரமத்தில் இறந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின், அவருடைய மனைவி மரியா ஜூபின் ஆசிரம பணியாளர்கள் பிஜு மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத் போன்ற 6️ பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அனுமதி இல்லாமல் ஆசிரமம் நடத்தியது, பெண்களை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தது, அந்த ஆசிரமத்தில் வசித்தவர்களை வெளிமாநிலத்துக்கு கடத்தியது, மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆதரவற்றோரை அடித்து துன்புறுத்தியது, சித்ரவதை செய்தது போன்ற 13 பிரிவுகளின் கீழ் கெடார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆசிரம பணியாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குரங்கு தாக்கி காயமடைந்த ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் மற்றும் உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவருடைய மனைவி மரியாஜூபின் உள்ளிட்ட இருவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதால், அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட முடியாத நிலை இருந்து வந்தது.
இந்த சூழ்நிலையில், உடல் நலம் சரியான முக்கிய குற்றவாளி மரியா ஜூபினை செஞ்சி காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்காக கெடார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர் சிகிச்சையில் இருந்து வரும் அன்பு ஜுவின் என்று காலை கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
முன்னதாக ஆசிரமத்தில் தங்கியிருந்து அதன் பிறகு பணியாளராக மாறி வேலையை பார்த்து வந்த பூபாலன் சதீஷ் உள்ளிட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.