“காஷ்மீர் வேண்டாம்… விராட் கோலியை கொடுங்கள்” என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொடிபிடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 23ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதனால் வழக்கம்போல் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்த இந்த ஆட்டத்தில் 53 பந்துகளில் 82 ரன்களை குவித்தது மட்டுமில்லாமல், கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தி்ல் நின்று இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் விராட் கோலி.
இந்த ஆட்டத்தில் 160 ரன்கள் என்கிற இலக்கை கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றிகரமாக விரட்டிப் பிடித்தது இந்திய அணி. இதுவே டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் விராட் கோலி 4வது முறையாக இறுதிப்பந்து வரை களத்தில் ஆட்டமிழாக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கோலியின் சராசரி 308 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து பாகிஸ்தான் ரசிகர்களே மிரண்டு போனார்கள். இதற்கிடையே, இந்த போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் ரசிகர்கள் “காஷ்மீர் வேண்டாம்… விராட் கோலியை கொடுங்கள்” என்று கொடிபிடித்தபடி நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், அது உண்மை இல்லையென்றும், எடிட் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.