முஸ்லீம் தனிநபர் சட்டம் தொடர்பான சட்டப் பிரச்சினையில் எந்தப் பயிற்சியும் அல்லது சட்ட அறிவியலும் இல்லாத மதகுருமார்களை நீதிமன்றங்கள் நம்பி முடிவெடுக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இஸ்லாமிய பெண்கள், குலா சட்டம் மூலம் விவாகரத்து பெற அனுமதி வழங்கக்கோரி, கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தனர். அதில், நீதித்துறை அமைப்புகள் மூலம் விவாகரத்து பெறுவது இஸ்லாமியப் பெண்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், அதனால் விவாகரத்து செயல்முறை தாமதமாவதாக கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இஸ்லாமிய பெண்கள் குலா மூலம் விவாகரத்து செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது குலா விவாகரத்து முறையில், கணவர்களின் சம்மதத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தனர். ஷரியத் சட்டமான குலாவின் படி, இஸ்லாமிய பெண் ஒருவருக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லை என்றால், விவாகரத்து அறிவிக்க முடியும் என்றும், திருமணத்தின்போது தான் பெற்றுக்கொண்ட பரிசுகளைத் திருப்பித் தர விருப்பம் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், விவகாரத்துக்காக பெண்கள் தலாக் கூறும்போது கணவன் மறுப்பு தெரிவித்தால், பெண்கள் விவாகரத்து பெறுவதற்கான மற்ற சாத்தியக்கூறுகள் பற்றி குரானில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தனர். அதேபோல் ஒரு பெண் தன் விருப்பப்படி விவாகரத்து செய்யக்கூடிய வேறு எந்த சட்ட முறைகள் குறித்தும் மனுதாரர்கள் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த சூழ்நிலையில் ஒரு இஸ்லாமிய பெண் தன் விருப்பப்படி விவாகரத்து செய்ய குலா மட்டுமே சட்டப்பூர்வமான வழி என்றும் தெரிவித்தனர்.
குலா என்பது விவாகரத்துப் பெறுவதற்கான ஒரு சட்ட நடைமுறையாகக் கருதப்படுவதால், இஸ்லாமிய பெண்கள் அதன் மூலம் விவாகரத்து பெற நீதிமன்றத்தை அணுக தேவையில்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.