திருமணமான பிறகும் காதலை மறக்க முடியாததால் காதலனுடன் சேர்ந்து இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் ஹுருசகுண்டகி பகுதியைச் சேர்ந்தவர் ஈஷப்பா (22). இவரும் அதேப் பகுதியைச் சேர்ந்த சுவர்ணா (20) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு சுவர்ணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, சுவர்ணாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து சுவர்ணாவின் கணவர், சுவர்ணாவை அழைத்துக் கொண்டு பெங்களூரு வந்துள்ளார். இருப்பினும் சுவர்ணாவால் தனது காதலை மறக்க முடியாததால், ஈஷாப்பாவுடன் செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் இருந்து சுவர்ணா, காதலனை சந்திக்க யாதகிரிக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது, இருவரும் நம்மால் வாழ்வில் ஒன்று சேர முடியாது என்பதால், சாவிலாவது ஒன்று சேர்வோம் என்று அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.