பெற்றோரை கொன்று விடுவதாக மிரட்டி 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 22 வயது இளைஞரை சென்னை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சார்ந்தவர் 22 வயது இளைஞர் விக்கி. இவர் அதே பகுதியைச் சார்ந்த 15 வயது சிறுமியை தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே சிறுமிக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார். பின்னர் மயக்கம் தெளிந்த சிறுமியிடம் இதைப் பற்றி வெளியே தெரிவித்தால் அவரது பெற்றோரை கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இந்நிலையில் சிறுமியை அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ள அவர் தன்னிடம் பேசுவதை நிறுத்தினாலோ அல்லது தான் சொல்வதை கேட்காமல் இருந்தாலோ அவருடைய பெற்றோரை கொன்று விடுவதாக தொடர்ந்து மிரட்டி இருக்கிறார். இதனால் சிறுமி மிகவும் பயந்த மனநிலையில் காணப்பட்டிருக்கிறார்.
மகளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனித்த பெற்றோர் அவரிடம் அதற்கான காரணங்களை கேட்டு இருக்கின்றனர். முதலில் கூற மறுத்த சிறுமி, பெற்றோர் தொடர்ந்து கேட்டதால் நடந்த உண்மைகள் அனைத்தையும் கூறி கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் சோலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரை அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த குரோம்பேட்டையைச் சார்ந்த 22 வயது விக்கி என்ற இளைஞரை தேடி வருகின்றனர். அந்த இளைஞர் இப்போது தலைமறைவாக இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் விரைவில் பிடிபடுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.